தென் கொரியா, சீனாவில் 6 நாள் பயணம்-ஷாங்காய் புறப்பட்டார் ஸ்டாலின்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சீனா, தென் கொரியாவி்ல் 6 நாள் பயணமாக நேற்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சீனா, தென் கொரியா நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காகவும், அந்த நாடுகளில் தொழில் தொடங்கியுள்ள பிற நாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பதற்காகவும் இந்த சுற்றுப் பயணத்தை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் உலக வர்த்தக பொருள்காட்சியில் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் அமைத்துள்ள அரங்குகளையும் அவர் பார்வையிட உள்ளார்.
மேலும் அந்நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளையும் அவர் பார்வையிடுகிறார்.
சாம்சங், ஹூண்டாய், நோக்கியா, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடனும் இந்த பயணத்தின்போது துணை முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தில் தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், துணை முதல்வரின் முதன்மைச் செயலர் கே. தீனபந்து ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.