அயோத்தி தீர்ப்பு: கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
பெங்களூர்: அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீ்ர்ப்பு அளிக்கவுள்ளதையடுத்து நாளையும் நாளை மறுதினமும் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பால் வன்முறை ஏற்படும் மாநிலங்கள் என்று உளவுப் பிரிவினரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று.
இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் விடுமுறை அளித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த 24ம் தேதி அன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதும் கர்நாடக மாநிலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர், தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் விடுமுறை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இம்முறை வியாழன், வெள்ளிக்கிழமை விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி-கல்லூரிகள் இயங்காது என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது.
அதே நேரத்தில் பெங்களூரின் பெரும்பாலான சாப்ட்வேர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இன்று விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை. ஆனாலும், பல ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
இதனாலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் பெங்களூரில் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பிற்பகலில் தீர்ப்புக்கு முன்னரே ஊழியர்கள் வீடு திரும்ப பெரும்பாலான நிறுவனங்கள் அனுமதித்துள்ளன.












Click it and Unblock the Notifications