ராஜராஜனின் மறுபக்கம் குறித்து கருத்தரங்கு: புதிய தமிழகம்
நிருபர்களிடம் அவர் கூறுகையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய இலவச கலர் டி.வி, கேஸ் அடுப்பு உள்ளிட்ட எந்தத் திட்டங்களும் இன்றளவும் பெரும்பாலான மக்களுக்கு சென்றடையவில்லை.
வீடில்லாதவர்களுக்கு 3 சென்டு வீட்டுமனை பட்டா, நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டமும் எந்த மாவட்டத்திலும் நிறைவேற்றப்படவில்லை.
எனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசைக் கண்டித்தும், திமுக அரசு பதவி விலக வலியுறுத்தியும் அக்டோபர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் முன் புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இன்னும் 6 மாத காலமே ஆட்சி எஞ்சியிருக்கும் நிலையில் ரூ.2,000 கோடியில் 3 லட்சம் வீடுகள் கட்டித் தருவதாகவும், ரூ.1,000 கோடியில் பழுதான சாலைகளை சரி செய்வதாகவும், ரூ.500 கோடியில் இலவச பம்பு செட் வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.
நிறைவேற்ற முடியாத இந்த திட்டங்கள் தொடர்பாக கவர்னரிடம் முறையிட இருக்கிறேன். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு வீணடித்து வருகிறது.
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே கல்விக் கடன் எளிதாக பெற முடியாத நிலை உள்ளது. சாதி, மதம், வருமானம் பார்க்காமல் அனைவருக்கும் வங்கி கடன் எளிதாக வழங்க வேண்டும்.
தஞ்சை பெரிய கோவில் கட்டி ஆயிரமாவது ஆண்டுவிழா நடந்து முடிந்துள்ளது. ராஜராஜ சோழனின் காலத்தில் தான் கோவில்கள் கட்ட விவசாயிகள் குடிநீக்கம் செய்யப்பட்டு நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
தேவதாசி முறையும் அந்தக் காலத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ராஜராஜனின் மறுபக்கம் குறித்து ஆராய ஒரு கருத்தரங்கை சென்னையில் நடத்த இருக்கிறோம் என்றார்.