எண்ணெய் விலை எக்கச்சக்கமா ஏறிப்போச்சு!!

மாநிலத்தில் எண்ணெய் வித்துக்களின் விலை உயர்ந்த நிலையில், தொழிலாளர் ஊதிய உயர்வு, மின் கட்டணம், வரி விதிப்புகள் அனைத்தும், எண்ணெய் விலையில் ஏற்றப்பட்டதால் தொடர்ந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் நடப்பாண்டு நிலக்கடலை, சூரியகாந்தி விதை ஆகிய எண்ணெய் வித்துக்களின் விளைச்சல், எதிர்பார்த்த அளவு இல்லை.
அதே நேரம் வடமாநிலங்களில் பெய்த பெரும் மழையால், விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்த அளவில் விளைந்த எண்ணெய் வித்துக்களும், வடமாநிலம், ஆந்திரா வியாபாரிகளால் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்லப்படுகின்றன. இதனால், எண்ணெய் மில்களுக்கு தேவையான நிலக்கடலை, சூரியகாந்தி விதை கிடைக்கவில்லை. மேலும், கடும் தட்டுப்பாடு காரணமாக விலையும் உயர்ந்துள்ளது.
நிலக்கடலை 60 கிலோ கொண்ட மூட்டை 1,110 ரூபாய் வரையும், சூரியகாந்தி விதை 50 கிலோ கொண்ட மூட்டை 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நிலக்கடலை, சூரிய காந்தி எண்ணெய் விலை, இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும், விலை ஏற்றத்தை சந்திக்கிறது. ஜூலையின் கடைசி வாரம், 76 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் கடலை எண்ணெய், 96 ரூபாய் வரை விற்கிறது.
கடந்த மாதம் சூரியகாந்தி எண்ணெய், லிட்டர் 70 ரூபாய்க்கு விற்றது. இப்போது அதன் விலை 75 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெயைத் தொடர்ந்து பாமாயிலின் விலையும் உயர்ந்துள்ளது.
தலைக்கு தேய்ப்பதிலிருந்து விதவிதமான பண்டங்கள் தயாரிப்பது வரை முழுக்க முழுக்க எண்ணெய்யையே நம்பியுள்ள தீபாவளி நெருங்கும் சூழலில், எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications