பல மத கட்டடங்களுக்கும் சவால் தரும் அயோத்தி தீர்ப்பு: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

இந்த அமைப்பின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி நில வழக்கு சம்பந்தமாக வெளியிட்டுள்ள தீர்ப்பின் முழு விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் மூன்று நீதிபதிகளும் வழக்கின் முக்கிய பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
எனினும் தீர்ப்பின் மைய கருத்து சர்ச்சைக்குரிய நிலத்தின் இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பிரித்து அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசலின் மைய பகுதியை இந்துகளுக்கு கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு வழக்கில் சமர்பிக்கப்பட்ட உண்மை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் வெறுமனே மத நம்பிக்கையின் அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.
எந்த கட்சியினரும் நிலத்தை பிரித்து வழங்கும்படி கோரவில்லை. இந்த வழக்கில் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்பிற்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் காலங்களில் வரும் வழக்குகளிலும் பின்பற்றப்படுமானால் நாட்டின் பல்வேறு மத மற்றும் பண்டைய கால கட்டடங்களுக்கு பெரும் சவாலாகவே அமையும்.
வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் உயர்நீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது என்று குறிப்பிடவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புள்ளது.
உத்தரப் பிரதேச சன்னத் முஸ்லீம் வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்திய முஸ்லிம்கள் பாபர் மசூதியை சட்டரீதியாகவும் ஜனநாயாக முறையிலும் மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பொது அமைதியினையும் மத நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
பிற முஸ்லிம் அமைப்புகளும் அதிருப்தி:
இந்தத் தீர்ப்பு நீதிமன்றத் தீர்ப்பு போல இல்லாமல், ஒரு ஏற்பாடு போலவோ, உடன்பாடு போலவோ உள்ளது என்று ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த அப்துல் ஹமீது நோமானி கூறினார்.
தீர்ப்பு முழுவதும் குழப்பம் நிறைந்ததாகவும், முரண்பட்டதாகவும் உள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர் என அகில இந்திய மில்லி கவுன்சில் கூறியுள்ளது.
சட்ட மோதலில் கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இடிக்கப்பட்ட மசூதியில் மூன்றில் ஒரு பங்கு நிலம் மட்டுமே முஸ்லிம்களுத்து என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அகில இந்திய மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லிமின் அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி கூறியுள்ளார்.
மேல் முறையீடு-சன்னி வக்பு வாரியம்:
யோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்துத் தருவதை ஏற்க முடியாது; நிலத்தை விட்டுத்தர முடியாது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிரித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் சார்பில் இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ஜபர்யப் ஜிலானி கூறினார்.
அவர் கூறுகையில், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்துத் தரும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எங்களால் ஏற்க முடியாது, எங்களுக்குரிய இடத்தை விட்டுத்தரவும் முடியாது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண யாராவது முன்வந்தால் நாங்கள் பேசவும் தயார்.
இப்போதுள்ள நிலைமையே இன்னும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. எனவே நாங்கள் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் உள்ளது.
அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்திடம் ஆலோசனை நடத்திய பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான மனுவைத் தயார் செய்வோம்.
அதற்கும் முன்னதாக பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவுடனும் ஆலோசனை செய்வோம்.
சமரசத் தீர்வுக்கு ஏதாவது யோசனைகள் வந்தால் அதை நாங்கள் வரவேற்போம். ஆனால் அயோத்தியில் நிலத்தின் மீது எங்களுக்குள்ள உரிமையை விட்டுத்தர மாட்டோம்.
இந்தத் தீர்ப்பு ஒரு பக்கம் ஏமாற்றத்தைத் தந்திருப்பதுடன் இயற்கையான சட்டத்தன்மைக்கு முரணாகவும் இருக்கிறது; இந்த இடத்துக்கு உரிமைகோரி முஸ்லிம்கள் அளித்த ஆதாரங்கள் முழுதாக ஏற்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
மசூதி கட்டுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டோம் என்று யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றார் ஜிலானி.
அகமதியா முஸ்லிம் சமூகம் வரவேற்பு:
அதே நேரத்தி்ல்அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக அகமதியா முஸ்லிம் சமூகத்தின் மூத்த தலைவர் முகமது அசீம் கான் தெரிவித்துள்ளா.
முஸ்லிம்களில் சிலருக்கு இந்தத் தீர்ப்பு குறித்து ஆட்சேபம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றார்.












Click it and Unblock the Notifications