வெற்றியைக் கொண்டாடுவதில் நிதானம் வேண்டும்-நரேந்திர மோடி
லக்னெள & அகமதாபாத் & டெல்லி: சர்ச்சைக்குரிய இடத்தில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் எழுப்ப லக்னெள நீதிமன்றத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் எழுப்ப லக்னெள நீதிமன்றம் அளித்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.
அதே நேரத்தில் இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் நிதானமாக செயல்பட வேண்டும் என்றார்.
மாயாவதி:
உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறுகையில், லக்னெள நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. சிறிதும் தாமதப்படுத்தாமல் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
ராமஜென்ம பூமியில் ஏற்கெனவே 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புக்கு போதிய அளவில் மத்திய படைகளை அனுப்பவில்லை என்றார்.
கல்யாண் சிங் வரவேற்பு:
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பாஜக முதல்வராக இருந்தவருமான கல்யாண் சிங் கூறுகையில்,
இந்தத் தீர்ப்பின் மூலம் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அந்த இடத்தில் பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கு உதவி செய்ய முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்றார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார்:
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், அயோத்தி தீர்ப்பை சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தீர்ப்பில் அதிருப்தி இருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.
இந்தத் தீர்ப்பை ஒரு பிரிவினரின் வெற்றியாகவோ, மற்றொரு பிரிவினரின் தோல்வியாகவோ கருதத் தேவையில்லை என்றார்.
தீர்ப்பு ஆராயப்பட வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தீர்ப்பின் தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக ஆராயப்பட வேண்டும். தீர்ப்பில் உடன்பாடு இல்லாதவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று இந்தப் பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண முடியும். எனவே அனைத்துத் தரப்பினரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சிக்கலான விஷயங்கள் உள்ளன-இந்திய கம்யூனிஸ்ட்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ராஜா கூறுகையில், இந்தத் தீர்ப்பில் பல சிக்கலான விஷயங்கள் உள்ளன. எனவே தீர்ப்பு முழுமையாக கூர்ந்து ஆராயப்பட வேண்டும்.
தீர்ப்பில் உடன்பாடு இல்லாதவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வழியுள்ளது. எனவே இதை வெற்றியாக நினைத்து கொண்டாட வேண்டாம், தோல்வியாக நினைத்து வன்முறையிலும் ஈடுபட வேண்டாம். அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்று கூறியுள்ளார்.