சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக அமைச்சர் அவதூறு வழக்கு
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் அளித்த பேட்டியில் திருப்பூர் பனியன் தொழில் அதிபர்கள் திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மூலம் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு ரூ. 25 லட்சம் பணம் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சார்பில் சென்னை பெருநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த அமைச்சர் ஆவார். அவர் கடந்த 20 ஆண்டு காலமாக பொது சேவையில் உள்ளார். மேலும், தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர்.
இந்த நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவதூறு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதனால் இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் கோரி நோட்டீஸ் அனுப்பினோம். இதற்கு அவர் சரியான பதில் தரவில்லை.
எனவே, ராமகிருஷ்ணன் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 500-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.