பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம்!
சென்னை: தங்களை நிரந்தரமாக்கக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் வரும் அக்டோபர் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தா.பிச்சப்பா, பி.எஸ்.சௌந்தர பாண்டியன், டி.தனசேகரன் (ஏ.ஐ.டி.யு.சி.), திருச்செல்வன் எஸ்.ஜெயபிரகாசன் (சி.ஐ.டி.யு.), சிவா (பாட்டாளி தொழிற்சங்கம்) உள்பட பலர் பங்கேற்று ஆலோசித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர்கள் கூறியதாவது:
கடந்த ஆகஸ்டு 11-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்களை பழிவாங்கும் வகையில், கடையில் இருந்து குடோன்களுக்கும், மாவட்ட அலுவலகத்திறகும் நிர்வாகம் மாற்றி உள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு மனநிறைவு அளிக்கவில்லை. கடந்த 7 ஆண்டாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்து பேசி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வருகிற 12-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் திரளான ஊழியர்கள் பங்கேற்பார்கள்.