தென்காசி சப்-ஜெயிலில் திருடன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
தென்காசி: பெண் வேடமணிந்து திருடும் பிரபல கொள்ளையன் நேற்று காலை தென்காசி சப்-ஜெயிலில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
'நைட்டி'யுடன் போய் திருட்டு!
மாரியப்பன் பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண் வேடமிட்டுச் சென்று வீடுகளில் திருடுவார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் நைட்டி அணிந்து கொண்டு தென்காசி அருகே உள்ள ஒரு வீட்டில் திருடினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
நேற்று காலை மாரியப்பன் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அருகே உள்ள சப்-ஜெயில் பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த சில்வர் குவளையால் மாரியப்பன் திடீரென்று கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.