'சீன எல்லைக்குள் அருணாசலப் பிரதேசம்'-அதிர்ச்சி தரும் ஆப்பிள்

வட பகுதியான இமயமலையில் அமைந்துள்ள அருணாசலப் பிரதேசத்தை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கண்டுகொள்ளாத சீனா, அருணாசலப் பிரதேச எல்லையில் ஏராளமான ராணுவ படைகளை குவித்துள்ளது. அடிக்கடி சீன ராணுவம் இந்த எல்லைக்குள் ஊடுருவி அங்குலம் அங்குலமாக நிலத்தை அபகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இந்தியாவும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.
இந் நிலையில் சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் 'ஆப்பிள் ஐ-போன் 4' என்ற பெயரில் புதிய ரக செல்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சீன போன்களில் உள்ள உலக வரைப்படத்தில் அருணாசலப் பிரதேசம் சீனாவில் இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இது இந்தியாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெரிய மார்க்கெட்டான சீனாவில் விற்பனையை அதிகரிப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் தங்களது செல்போன்களில் உள்ள உலக வரைப்படத்தில் அருணாசலப் பிரதேசம் முழுவதும் சீனாவில் இருப்பது போன்று வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த போன்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சீன தலை நகர் பீஜிங்கில் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. 4 நாட்களில் இதன் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் 1 லட்சம் போன்களுக்கு ஆர்டர் குவிந்துள்ளது.
செல்போன் உலக வரை படத்தில் அருணாசல பிரதேசத்தை இந்தியாவுடன் இருப்பது போல் வரைந்தால் சீனர்கள் வாங்க மாட்டார்கள் என்று அந்நிறுவனம் கருதி இருக்கலாம். இதனால் தான் இது போன்ற வரைபடத்தை அந்நிறுவன நிர்வாகிகள் வரைந்திருப்பதாக சீன இணைய தளம் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலக வரைபடத்தில் அருணாசல பிரதேசம் இந்தியப் பகுதிக்குள் இருப்பது போன்ற வரைபடங்களை சீன அரசு ஏற்பதில்லை. அங்கு வரைபடங்கள் உருவாக்கும் நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடக்கிலும் தெற்கிலும்...
இந்தியாவின் வடபகுதியை ஒரு புறம் குறி வைத்த சீனா தற்போது தென் பகுதியையும் ஆக்ரமிக்க துடிக்கிறது. இதற்காக இலங்கையின் வன்னி பகுதியில் சீன ராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்படுகிறது. அங்கு விமான தளம் மற்றும் கப்பல் தளங்களும் தனது சொந்த செலவில் அமைத்து வருகிறது.
ஈழ தமிழர்களை கம்பி வேலி முகாம்களுக்குள் அடைக்க உத்தரவிட்ட சீனா, தமிழர்கள் வசித்த பகுதிகளில் ரகசியமாக ராணுவ தளம் அமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
இதனால் தென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications