டெலல்லி காமன்வெல்த் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை-ப.சிதம்பரம்
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எனவே அதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. போட்டியை சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பு (பிரிகேட் 313) மற்றும் இலியாஸ் காஷ்மீரி ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. பத்திரிகையாளர்கள் விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். போட்டிகளை கண்டு ரசியுங்கள்.
காமன்வெல்த் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். ஏற்கெனவே 5 ஆயிரம் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே எந்தவித அச்சத்திற்கும் அவசியம் இல்லை என்றார் சிதம்பரம்.
காஷ்மீர் பிரச்சினை குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஆனால் இதற்கு எவ்வித கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை.
கடந்த மாதம் 21 மற்றும் 22-ம் தேதிகளில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமருக்கு அறிக்கை அளிக்க உள்ளேன்.
காஷ்மீருக்கு அளித்துள்ள 8 அம்ச பரிந்துரைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டது. நடுநிலையாளர்களைக் கொண்ட குழு அமைத்து அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காலம் வரையறுக்கப்படவில்லை என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications