ஜெ.வுக்கு மீண்டும் கொலை மிரட்டல்-2 கடிதங்கள் வந்தன
மதுரையில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கண்டனக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து கடிதங்கள் வந்தபடி உள்ளது. இதுவரை 7 கடிதங்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக கிண்டி போலீஸார் ஐந்து வழக்குகளைப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான தமிழக காவல்துறையின் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த அதிமுக, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வந்தது. மேலும், இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றவும் கோரியது.
இதையடுத்து வழக்குகளை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
இந்த மிரட்டல் வழக்குகளில் மதுரை திமுக பிரமுகர் ஒருவரின் பெயரும் அடிபடுகிறது. அவரிடம் போலீஸார் விசாரணையும் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் 2 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திற்கு இந்தக் கடிதங்கள் வந்துள்ளன.
ஒரு கடிதம் குமரியிலிருந்தும், இன்னொரு கடிதம் மதுரையிலிருந்தும் வந்துள்ளது.
அதில், எச்சரிக்கை விடுத்த பிறகும் மதுரை வரும் ஜெயலலிதாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வான்வழி போக்குவரத்தில் வந்தால் காற்றில் பாஸ்பரஸை தூவி தீர்த்துக் கட்டுவோம். தரைவழி போக்குவரத்தில் வந்தால் சீனாவில் தயாரித்த குட்டி விமானம் மூலமாக (குண்டுவைத்து) கொல்வோம். நீர்வழி போக்குவரத்து வழியாக வந்தால் கொல்வது ஈசியாக முடிந்துவிடும். எச்சரிக்கைகளையும் மீறி வந்தால் தற்கொலைப் படையான நாங்கள் உன்னை, எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்ல காத்திருக்கிறோம். எம்.ஜி.ஆர். ஆட்சி மீண்டும் மலரும் என்று கூறப்பட்டுள்ளது.
குமரியிலிருந்து வந்துள்ளது இன்லேன்ட் கடிதமாகும்.அனுமோகன் என்ற பெயரில் அது வந்துள்ளது. மதுரையிலிருந்து வந்த மிரட்டல் மதி, எம்.பி.ஏ என்ற பெயரில் போஸ்ட் கார்ட் மூலம் வந்துள்ளது. இதுகுறித்தும் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.