முட்டம் கடலில் மூழ்கி சென்னை வாலிபர் பலி-2 பேர் மாயம்
குளச்சல் : சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதியில் மூழ்கி பலியானார். மேலும் 2 பேரைக் காணவில்லை.
சென்னையில் தனியார் ஏர் கண்டிஷன் ஆலையில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்த சென்னை மாங்காடு ஹரிதாஸ், அண்ணா அறிவாலயம் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் கார்த்திக், ஆழ்வார்பேட்டை ரமேஷ், பெரம்பூர் முகமது கவுஸ் மகன் முகமது நயித், முகமது சபீத் மகன் முகமது நயீன், மற்றும் சென்னை பம்மல் ஜீவமணி மகன் அருண்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று மாலை முட்டம் கடற்கரைக்கு சென்றனர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை கார்த்திக் என்பவரை இழுத்து சென்றது. உடனே ஹரிதாஸ், ரமேஷ் ஆகியோர் கடலில் குதித்து கார்த்திக்கை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களும் அலையின் சிக்கினர். 3 பேரையும் அலை இழுத்து சென்றது.
சில மணி நேரம் கழித்து ஹரிதாஸ் உடல் அப்பகுதியில் கரை ஓதுங்கியது. தகவல் அறிந்த மீனவர்கள் மாயமான இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ரமேஷ், கார்த்திக் ஆகியோரது கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வெள்ளி சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications