அக். 6ல் தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 6ம் தேதி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி கொடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும்.
ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழக அரசின் மேல்சபையில் சீட் ஒதுக்குவதுபோல தமிழக வக்கீல்கள் சார்பிலும் ஒரு உறுப்பினரை ஆளுனர் நியமனம் செய்ய வேண்டும்.
மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நீதிபதிகளை நியமிக்க உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டுவர மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக பதிவு செய்த இளம் வக்கீல்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரத்தை முதல் 3 ஆண்டுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் இணைந்து வழங்க வேண்டும்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்கங்களின் மின்கட்டணத்தை நீதிமன்ற மின்கட்டணத்துடன் சேர்த்து நீதித்துறையே எப்போதும்போல செலுத்த வேண்டுவது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6ம் தேதி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்..