நெல்லை-9 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்று ஆற்றில் வீசிய கயவர்கள்
நெல்லை: நெல்லையில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியுள்ளனர்.நெல்லை கொக்கிரகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுப்பிரமணியன். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் சுப்பிரமணியன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த கலாவை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களது மகள் முருகம்மாள். அருகிலுள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் காலை சுப்பிரமணியன் வேலைக்கும், கலா ஆடு மேய்க்கவும் சென்று விட்டனர். முருகம்மாள் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் மாலை 3 மணி வரை தெருவில் விளையாடி கொண்டிருந்தாள். அதன் பிறகு அவள் மாயமானாள். மாலை 5 மணிக்கு வீடு திரும்பிய அவரது பெற்றோர் மகளை காணாததால் அக்கம்பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையி்ல் நேற்று காலை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று கரையோரம் ஒரு சாக்கு மூடை ஓதுங்கியது.
அங்கு குளித்து கொண்டிருந்த சிலர் அதை பிரித்து பார்த்தபோது ஒரு சிறுமியின் உடல் போர்வையில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் சாக்கு மூடைக்குள் இறந்த நிலையில் இருந்தது காணாமல் போன சிறுமி முருகம்மாள் என்பது தெரிய வந்தது.
சிறுமியின் தொடை, மார்பு பகுதியில் காயங்கள் இருந்ததால் அவரை பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொன்று உடலை போர்வையில் சுற்றி சாக்குமூடையில் கட்டி ஆற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த சுப்பிரமணியன், கலா மற்றும் உறவினர்கள் முருகம்மாளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.