புலிகள் மீதான தடை-தீர்ப்பாயம் சென்னையில் இன்று விசாரணை
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழர் அமைப்புகள் கலந்து கொண்டு தடைக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு இந்தத் தடையை நீடித்து வருகிறது.
கடந்த மே மாதம் 14ம் தேதி இந்தத் தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயம் இந்த மனுவை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக் கொள்ளக் கோரி வைகோ விண்ணப்பம் செய்தார். ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவிட்டது.
இந் நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னையில் நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழர் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை கூறினர்.
இதில் பங்கேற்ற தமிழக போலீசார், கடந்த ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இந்த விசாரணை வரும் 20ம் தேதி ஊட்டியில் நடக்கிறது.