மாணவி தற்கொலை-அண்ணா பல்கலை.யை முற்றுகையிட்டு போராட்டம்-தடியடி
சென்னை: மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். இதுதொடர்பாக 120க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து வந்தார். கடந்த மாதம் அவர் தனது வீட்டுக்கு வந்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மரணமடைவதற்கு முன்பு தன்னை சிலர் வகுப்பில் ராகிங் செய்ததாகவும், ஆங்கிலம் பேசத் தெரியாததால் கேலி செய்ததாகவும் தனது சகோதரரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் ராகிங்கே கிடையாது, மாணவியின் தாயார் அவருடன் இல்லை. அவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று மாணவியின் குடும்ப நடத்தை குறித்து கருத்து தெரிவித்திருந்தார் பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பல்கலைக்கழக மெயின் கேட் மூடப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
போராட்டம் நடத்த வந்தவர்கள் மெயின் கேட் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே புக முயன்றனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களில் பலர் பெண்கள் ஆவர். அவர்கள் மீதும் போலீஸ் தடியடி நடந்தது. அவர்கள் அடி தாங்க முடியாமல் கீழே விழுந்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் போலீஸார் எதையும் கண்டுகொள்ளவில்லை. கையில் கிடைத்தவர்களையெல்லாம் தடிகளால் அடித்து போலீஸ் வேனில் ஏற்றினர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்திற்குக் கூட்டிச் சென்று தங்க வைத்து மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications