பிளைடு வைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் கடிதம்-டாக்டருக்கு சிறை
சென்னை: தனக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் எழுதி அதில் பிளேடை வைத்து இணைத்து அனுப்பிய டாக்டருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் காவடிபேட்டையைச் சேர்ந்தவர் கபிலன் (52). டாக்டர். அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்தவர் அற்புதராஜ்.
டாக்டர் கபிலன் எப்போதும் குடிபோதையில் இருப்பார். இதனால் அற்புதராஜ்தான் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை எழுதிக் கொடுப்பாராம்.
இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் அற்புதராஜ். அதில், டாக்டரை போல நான் நோயாளிகளை கவனித்து வருகிறேன். இதனால் ஊசி, மருந்து கொடுப்பதற்கும் மருத்துவமனை நடத்துவதற்கும் அங்கீகாரம் கிடைக்குமா? என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுப்ரமணி விசாரித்தார். விசாரணையின் இறுதியில், கம்பவுண்டர்கள் அங்கீகாரம் பெற வேண்டுமானால் மாவட்ட மருத்துவ அதிகாரி அல்லது மாவட்ட கலெக்டரிடம் கடிதம் பெறவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு டாக்டர் கபிலனை கோபப்படுத்தியது. இதையடுத்து அவர் கொலை மிரட்டல் கடிதம் எழுதி அதில் பிளேடு வைத்து நீதிபதிக்கு அனுப்பினார். இதுகுறித்து நீதிபதி போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி கபிலனைக் கைது செய்தனர். அவர் மீது ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிபதிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது மட்டுமல்லாமல் பிளேடும் அனுப்பியுள்ளார். இதனால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.