மகாராஷ்டிரம்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் 4 போலீசார் பலி
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே கட்சிரோலி பகுதியில் மத்தியப் படையினரும் மாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள காட்டுப் பகுதி கிராமத்துக்கு இந்தப் படையினர் ஜீப்பில் சென்றபோது, நக்ஸலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி வெடித்துச் சிதறியது. இதில் ஜீப் சுக்குநூறானது.
அதில் பயணம் செய்த 2 மத்தியப் படை போலீசார், 2 மாநில போலீசார் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இரு நாட்களுக்கு முன் போலீசார் இந்தப் பகுதியில் பதுங்கியிருந்த 20 மாவோயிஸ்டுகளை கைது செய்தனர். இதற்கு பழி வாங்கும் வகையில் இந்தத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சலில்டோலா என்ற இடத்தில் 2 பொதுமக்களை மாவோயிஸ்டுகள் சுட்டு கொன்றனர். போலீசுக்கு உளவு சொன்னதால் இந்த கொலைகளை அவர்கள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.