For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் மத்திய தீர்ப்பாயத்திடம் நேரில் ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் 'அறிவிப்பாணை' மூலம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கடந்த மே மாதம் மேலும் 2 ஆண்டுகள் தடையை நீட்டிக்க சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது சரியா என்பது குறித்து தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பாயம் தனது விசாரணையை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும். இதன் முதல் இரண்டு கூட்டங்கள் டெல்லியில் நடந்த நிலையில் நேற்று சென்னையில் 3வது கூட்டம் நடந்தது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஜுடிசியல் அகாதெமியில் நடந்த இக் கூட்டத்தில் தமிழக க்யூ பிராஞ்ச் போலீஸ் எஸ்.பி. அசோக் குமார் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து அளித்த சாட்சியத்தில்,

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீதும், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் குறித்த ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து வைகோ ஆஜராகி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமே அந்த இயக்கம் உள்ளது. அதன் மீதான தடையை நீடிக்க அரசு கூறும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்றார்.

பின்னர் பழ. நெடுமாறன் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நான் நடத்தி வந்த தமிழர் தேசிய இயக்கம் என்ற கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. என் மீதும், எனது கட்சியினர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி எங்கள் பேச்சுரிமையே பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் தொடர்கிறது. இதன் அடுத்த கட்ட கருத்தாய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி ஊட்டியில் நடைபெறவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X