இலவச தொலைக்காட்சி பெட்டிகள்-மேலும் 10 லட்சம் டி.விக்கள் கொள்முதல்
சென்னை: பொது மக்களுக்கு வழங்க 10 லட்சம் இலவச டி.விக்களை வாங்க முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இதுவரை ஐந்து கட்டங்களில் 3492 கோடியே 72 லட்சம் ரூபாய்ச் செலவில் 1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் இலவச டி.விக்கள் கொள்முதல் செய்யப்பட்டு;
1 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 922 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய கலர் டி.வி.க்கள் வழங்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், சில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு கூடுதல் கலர் டி.விக்கள் தேவைப்படுவதாகக் கோரிக்கைகள் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கோரிக்கைகள் குறித்து முடிவு செய்திட முதல்வர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடை பெற்றது.
இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் யசோதா (காங்கிரஸ்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), அப்துல் பாசித், (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 40 லட்சம் கலர் டி.விக்களைக் கொள்முதல் செய்திட பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் அடிப்படையிலேயே மறு ஒப்பந்தப்புள்ளி கோராமல் 25 சதவீதம் வரை, அதாவது 10 லட்சம் கலர் டி.விக்களைக் கூடுதலாக கொள்முதல் செய்வது என்றும்,
அவற்றின் விநியோகப் பணிகளை 2011 ஜனவரி மாத இறுதிக்குள் பூர்த்தி செய்திட வேண்டுமென்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications