பெங்களூர் பிபிஓ ஊழியை பிரதீபா கற்பழிப்பு-கொலை வழக்கு-குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சில தினங்களுக்கு முன்புதான் சிவக்குமார் குற்றவாளி என பெங்களூர் கோர்ட் அறிவித்திருந்தது. இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டு டிசம்பரம் மாதம் இரவுப் பணியை முடித்து விட்டு பிரதீபா, தனது நிறுவனம் வழங்கிய வாடகை காரில் வீட்டுக்குப் பயணித்தார். ஆனால் அந்த காரை செலுத்தி சிவக்குமார், பிரதீபாவை கடத்திச் சென்று கற்பழித்துக் கொடூரமாகக் கொலை செய்து உடலை பெங்களூர் புறநகர்ப் பகுதியில் போட்டு விட்டுத் தப்பினார். அடுத்த நாள் உடல் கைப்பற்றப்பட்டது. பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் சிவக்குமார் சிக்கினார்.
பிரதீபாவின் கொலை நாடு முழுவதும் பிபிஓ நிறுவனங்களிப் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறிகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. பிரதீபா மரணத்தைத் தொடர்நதே பிபிஓ மற்றும் பிற கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க காரணமாக இருந்தது.
விரைவு நீதிமன்ற நீதிபதி சிவக்குமாருக்கு தண்டனை விதித்ததும், அதைக் கேட்டு கோர்ட்டில் இருந்த பிரதீபாவின் 80 வயது தாயார் கெளரம்மா கதறி அழுதார்.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கயவனுக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஆயுள் தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தண்டனை எனது மகளின் ஆன்மாவை சாந்திப்படுத்தினால் போதும்.
எனது மகள் இறந்த நாள் முதல் எனக்கு அமைதி இல்லை. ஒரு நாள் கூட அவளை நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை. எனது மகளே போய் விட்டாள், எனக்கு எப்படி அமைதி கிடைக்கும்.
யாருக்கும் தீங்கு நினைக்காதவள் எனது மகள். தனது மரணத்திலும் கூட நல்லதைத்தான் செய்துள்ளாள். அவளது மரணத்திற்குப் பிறகுதான் நாடு முழுவதும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு இன்று பாதுகாப்பு கிடைத்துள்ளது. அது எனக்கு மன நிறைவைத் தருகிறது என்றார் கெளரம்மா.