For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனவெறிப் பேச்சு-மன்னிப்பு கேட்டது நியூசிலாந்து

Google Oneindia Tamil News

Sheila Dikshit
டெல்லி: டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்தும், இந்திய மக்கள் குறித்தும் இனவெறியுடன் பேசிய நியூசிலாந்து நாட்டு டிவி தொகுப்பாளருக்காக நியூசிலாந்து நாட்டு தூதர் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நியூசிலாந்தைச் சேர்ந்த டிவி நியூசிலாந்து என்ற டிவியின் தொகுப்பாளரான பால் ஹென்றி என்ற நபர், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று டிவி பேட்டி ஒன்றில் இனவெறியை வெளிப்படுத்தி பேசியிருந்தார். முதல்வரின் பெயரை அசிங்கமான முறையில் உச்சரித்து சிரித்து மகிழ்ந்தார். அத்தோடு நில்லாமல் இந்தியர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியிருந்தார்.

இந்த அநாகரீக செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. நியூசிலாந்தின் இந்த இனவெறிப் பேச்சை ஏற்கவே முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், நியூசிலாந்து தூதர் தன்னை வந்து சந்திக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் ரூபர்ட் ஹால்பாரோ கிருஷ்ணாவை சந்தித்து மன்னிப்பு கேட்டார். பின்னர் அவர் வெளிட்ட அறிக்கையில், நியூசிலாந்து தூதர் என்ற முறையில், சம்பந்தப்பட்ட பேச்சால் ஏற்பட்டுள்ள மன வேதனைக்காகவும், வருத்தத்திற்காகவும் நான் முழுமையான மன்னிப்பை கோருகிறேன்.

அந்தப் பேச்சு முற்றிலும் அநாகரீகமானது, கலாச்சாரமற்றது, பொருத்தமற்றது, அசிங்கமானது. அந்தக் கருத்து சம்பந்தப்பட்ட நபரின் கருத்து மட்டுமே. நியூசிலாந்து அரசு அல்லது மக்களின் கருத்து அல்ல என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்து தூதரின் சந்திப்புக்குப் பின்னர் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ஹென்றி மீது நியூசிலாந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நியூசிலாந்து தூதரிடம், இந்தியாவின் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் உரத்த குரலில் தெரிவித்துள்ளோம். இதுபோன்ற பொறுப்பற்ற ஒரு நபரின் அநாகரீகப் பேச்சை, ஒரு மீடியா நிறுவனம் ஒளிபரப்பியது கடும் கண்டனத்துக்குரியது, அதிர்ச்சிகரமானது. நியூசிலாந்து போன்ற பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டிலிருந்து இப்படி ஒரு அநாகரீக செயல் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஷீலா தீட்சித்தை மட்டுமல்லாமல், நியூசிலாந்து கவர்னர் ஜெனரலான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர் ஆனந்த் சத்யானந்த்தையும் கூட அந்த பால் ஹென்றி இனவெறியுடன் விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது இந்த ஹென்றியை டிவி நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் அரசு தரப்பில் இதுவரை மன்னிப்பு கேட்டதோடு சரி, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X