பெண்களுக்கும் 8 மணி நேர வேலை தர வலியுறுத்தல்
ஈரோடு: பெண்களுக்கு ஒரு நாளுக்கு 8 மணி நேர வேலை மற்றும் தொழிற்சங்க உரிமையை வலியுறுத்தி நவம்பர் 23 ல் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பட்டம் நடத்த உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் 8 வது மாநில மாநாடு அக்டோபர் 5 முதல் 7ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழுவின் அகில இந்திய அமைப்பாளர் டாக்டர் கே.ஹேமலதா, சிஐடியு மாநில பொது செயலாளர் அ. சவுந்தரராசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதனையடுத்து, இந்த அமைப்புக்கு, மாநில கன்வீனராக மாலதி சிட்டிபாபு-வும், இணை அமைப்பாளர்களாக டி.எ.லதா, வி.பி.இந்திரா, எம்.ராஜீ, எம். பகவதி, கே. தமிழரசி, எம்.மகாலட்சுமி, எம். தனலட்சுமி, எம். கிரிஜா ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாட்டில், பெண்கள் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஜவுளி, கட்டுமானம், மீன்பிடி மற்றும் கணிணி தொழில்நுட்ப மையங்களிலும், அமைப்புசாரா துறையிலும் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு, 8 மணி நேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து பணி தளங்களிலும் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
மேலும், வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய ஆணையை வெளியிட வேண்டும். உடலுழைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட 14 நலவாரிய செயல்பாடுகளை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும், பெண்களுக்கு ஒரு நாளுக்கு 8 மணி நேர வேலை மற்றும் தொழிற்சங்க உரிமையை வலியுறுத்தி நவம்பர் 23 ல் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பட்டம் நடத்துவது என்று பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.