சென்னை-கொழும்புக்கு தினசரி விமான சேவை தொடங்கும் ஸ்பைஸ்ஜெட்!
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு நகருக்கு தினசரி விமான சேவை துவக்குகிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.
சென்னையிலிருந்து நள்ளிரவு (அதிகாலை) 1.30 மணிக்கு கிளம்பும் இந்த விமானம், அதிகாலை 2.50க்கு பண்டாரநாயகா விமானநிலையம் போயச் சேரும்.
முதல் விமானத்தை சன் குழுமத் தலைவரும், ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருப்பவருமான கலாநிதி மாறன் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார்.
கொழும்பிலிருந்து அதிகாலை 4.10 க்கு புறப்படும் விமானம் காலை 5.30க்கு சென்னை வந்தடையும். இந்த விமானத்தை இலங்கை விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அபய குணவர்தனே கொழும்பு விமான நிலையத்தில் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார்.
அடிப்படைக் கட்டணம் ரூ 999 ரூபாயாக இருக்கும். போயிங் 737-800 விமானம் இந்த ரூட்டில் பயன்படுத்தப்படும்.
கொழும்பு தவிர, பங்களாதேஷ், நேபாளம், மாலத்தீவுகள், பூடான் உள்ளிட்ட பிற அண்டை நாட்டு தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கும் விமான சேவை துவக்க முடிவு செய்துள்ளது ஸ்பைஸ்ஜெட்.
ஸ்பைஸ் ஜெட்டை சமீபத்தில்தான் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.