இந்தியர்கள் குறித்த இனவெறி இமெயில்-4 ஆஸி. போலீஸார் டிஸ்மிஸ்
மெல்போர்ன்: இந்தியர்கள் குறித்து இனவெறி இமெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக 4 விக்டோரியா மாகாண போலீஸார் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர்மீது ஒழுங்குநடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியர் ஒருவர் மின்சார ரயிலில் அடிபட்டு இறந்ததை வைத்து இனவெறியுடன் கூடிய இமெயில்களை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண போலீஸார் அனுப்பியிருந்தனர். அதில், ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர இதுபோல செய்தால்தான் சரி என்று கூறியிருந்தனர்.
இந்த இமெயில்களுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆஸ்திரேலிய தூதரை நேரில் வரவழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் எனவும் கண்டிப்புடன் கூறியது.
இதையடுத்து தனது சோம்பலை நிறுத்திக் கொண்டு ஆஸ்திரேலியா நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சம்பநத்ப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் 15 போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவர் பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த 20 பேரில் நான்கு பேர் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேருக்கு 3000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை 12 மாத ஒழுங்கு பயிற்சிக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 9 அதிகாரிகள் அக்டோபர் 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த வாரத்தில் மற்ற 6 பேரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஹெரால்டு சன் செய்தி வெளியிட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையைக சந்திக்க விரும்பாத 2 அதிகாரிகள் தாங்களாகவே பணியிலிருந்து விலகி விட்டனராம்.












Click it and Unblock the Notifications