பெங்களூரில் மரங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்
மரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் நிறைந்த மாநகர் பெங்களூர். இருப்பினும் இதெல்லாம் பழங்கதையாகி விட்டது. இருபுறமும் அடர்த்தியான மரங்கள் நிறைந்த அவென்யூக்களைக் கொண்ட மாநகராக ஒருகாலத்தில் பெங்களூர் விளங்கியது. ஆனால் இந்த அவென்யூக்கள் எல்லாம் இப்போது மறைந்து போய் விட்டன.
இருக்கிற மரங்களும் கூட குறைந்து கொண்டே வருகின்றன. கான்க்ரீட் காடாக மாறிப் போய்க் கிடக்கிறது பெங்களூர். இந்த நிலையில் இருக்கிற மரங்களைக் காக்கவும், பெங்களூர் நகரின் மர வளத்தை அதிகரிக்கவும் மாநகராட்சி களத்தில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ரூ. 1 கோடி செலவில் மரங்கள் குறித்த கணக்கெடுப்பை மாநகராட்சி நடத்தவுள்ளது. மாநகராட்சியின் வனப் பிரிவும், சப்னா என்ஜிஓ அமைப்பும் இணைந்து, ஜிஐஎஸ் முறையைப் பயன்படுத்தி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளன.
மரங்களின் எண்ணிக்கை, அவற்றின் உயரம், அடர்த்தி உள்ளிட்டவை அளவிடப்பட்டு கணக்கிடப்படவுள்ளது.
இதில் பெருமளவிலான மாணவ, மாணவியர் உள்ளிட்ட வாலன்டியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மரங்கள் கணக்கெடுப்பு குறித்த ஐடியாவை தெரிவித்தவர் விஜய்பாபு என்ற 2ம் ஆண்டு பொறியியல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் சோதனை ரீதியாக ஹம்பிநகர் வார்டு பகுதியில் உள்ள மரங்களை கணக்கிட்டு தெரிவித்தார். இதையடுத்து தற்போது பெங்களூர் மாநகரம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.