ராப்ரி தேவியின் சொத்துக் கணக்கு-62 பசு மாடுகளும், 42 கன்றுக் குட்டிகளும்!

பீகார் சட்டசபைத் தேர்தலில் சோனேபூர், ரகோபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் ராப்ரி. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அவர் அத்துடன் தனது சொத்துக் கணக்கையும் தெரிவித்துள்ளார். அதில்தான் இவ்வாறு கூறியுள்ளார் ராப்ரி.
இந்த பசு மாடுகளும், கன்றுக் குட்டிகளும், லாலு பிரசாத் யாதவுக்குச் சொந்தமான தானாபூரில் உள்ள பண்ணையில் அடைத்து வைத்து பராமரித்து வருகிறாராம் ராப்ரி.
இதுபோக ரூ. 7.62 லட்சம் மதிப்பிலான நகைகள் வைத்திருக்கிறார் ராப்ரி. வங்கியில் ரூ.2.29 லட்சம் பணத்தைப் போட்டு வைத்துள்ளார். பான்டுகள் மூலம் ரூ. 11.78 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
அவருடைய அசையாச் சொதுக்கள் பாட்னா, கோபால்க்ன்ச்சில் உள்ள விவசாய மற்றும் விவசாயம் சாராத நிலங்களாக காட்டப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடியாக கூறப்பட்டுள்ளது.
லாலு, ராப்ரிக்கு ஆடு, மாடுகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிலும் மாடுகள் என்றால் லாலுவுக்கு மிக மிகப் பிடித்தமான விஷயமாகும்.
லாலு முன்பு முதல்வராக இருந்தபோது அவரது அதிகாரப்பூர்வ வீட்டில் நூற்றுக்கணக்கான மாடுகளைப் போட்டு நிரப்பி வைத்திருந்தார். அவற்றில் முக்கால்வாசி மாடுகள் பசுக்கள் ஆகும். ஆனால் 2005ல் ராப்ரி தேவி ஆட்சியை இழந்த பின்னர் அந்த வீட்டை விட்டு லாலு குடும்பத்தினர் 'பத்தி' விடப்பட்டனர். இதையடுத்து தனது மாடுகளை தானாபூரில் உள்ள பண்ணைக்கு மாற்றினார் லாலு என்பது நினைவிருக்கலாம்.
ராப்ரி தேவி 1997 முதல் 2005ம் ஆண்டு வரை பீகார் முதல்வராக இருந்தார். அவர்தான் அந்த மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 21ம் தேதி தொடங்கி நவம்பர் 20ம் தேதி வரை ஆறு கட்டமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications