வளர்ச்சி குறைந்த நாடு என்று கூறியதற்காக மலாவியிடம் மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்
அக்டோபர் 3ம் தேதி காமன்வெல்த் போட்டி தொடக்க விழா டெல்லியில் கோலாகலமாக நடந்தது. அப்போது மலாவி நாடு குறித்து கூறுகையில், தூர்தர்ஷன் வர்னணையாளர் ஒருவர் உலகிலேயே மிகவும் வளர்ச்சி குறைந்த நாடு என்று வர்ணித்தார்.
இதற்கு மலாவி நாடு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரதமர் அலுவலகமும், இந்தியத் தூதரகமும் தலையிட்டன.மலாவியிடம் மன்னிப்பு கேட்குமாறு அவை தூர்தர்ஷனுக்கு உத்தரவிட்டன. இதையடுத்து தூர்தர்ஷன் இயக்குநர் ஜெனர் அருணா சர்மா, மலாவி தூதர் கிறிஸி சவாஞ்சேவுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தூர்தர்ஷன் வர்னணையாளர் கூறிய கருத்து எந்தவித உள்நோக்கமும் இல்லாதது, எதார்த்தனமானது, அவதூறானது அல்ல. இருப்பினும் இந்தக் கருத்துக்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக அருணா சர்மா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உகாண்டா நாடு காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்கள் மீது கடும் கோபத்துடன் உள்ளது. அந்த நாட்டு அதிகாரிகள் சென்ற கார், விபத்துள்ளானதால் இந்த அதிருப்தியில் அது உள்ளது. தற்போது மலாவியும் அப்செட்டாக்கியுள்ளது.
இது இந்தியாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் இந்தியா போட்டியிடுகிறது. இதில் வெற்றி பெற ஆப்பிரிக்க நாடுகளின் உதவியை இந்தியா எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாடுகள் அப்செட்டாகியுள்ளது இந்தியாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் மலாவி அதிபர் நவம்பர் 3ம் தேதி இந்தியா வருவதும் குறிப்பிடத்தக்கது.