சம்பளத்தைத் தொடர்ந்து எம்.பிக்களுக்கு தினசரிப் படி, பயணப் படியும் உயர்வு
எம்.பிக்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது மனைவிமார்கள் அல்லது கணவர்மார்களுக்கும் இந்த சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் இது அமலுக்கு வருகிறதாம்.
அதன்படி எம்.பிக்களுக்கான தினசரி படி ரூ. 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல வாகனங்களுக்கு வழங்கப்படும் பயணப் படி கிலோமீட்டருக்கு ரூ. 16 என உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் எம்.பிக்களின் மனைவிமார்கள் அல்லது கணவர்மார்கள், எத்தனை முறை வேண்டுமானாலும், ரயில்களில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்யலாம். அதாவது வீட்டிலிருந்து டெல்லிக்கும், டெல்லியிலிருந்து வீட்டுக்கும் இந்த இலவச பயணத்தை மேற்கொள்ளலாம்.
நாடாளுமன்றம் நடைபெறும் சமயத்திலும், எம்.பிக்களின் மனைவிமார்கள் அல்லது கணவர்மார்கள், விமானம் மற்றும் ரயிலில் இலவச பயணத்தை மேற்கொள்ள முடியும். இருப்பினும் இந்த ஓசி பயணம் வருடத்திற்கு எட்டுமுறைக்கு மேல் போகக் கூடாதம்.
இந்த மாதத்திலிருந்து கன்வேயன்ஸ் அட்வான்ஸ் பணம் அதிகபட்சம் ரூ. 4 லட்சம் வரை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20ம்தேதிதான் எம்.பிக்களின் சம்பளம் ரூ. 16000 என்பதிலிருந்து ரூ. 50000 ஆக உயர்த்தப்பட்டது. அத்தோடு எம்.பிக்களின் அலுவலக செலவுப் படியும் ரூ. 20 ஆயிரம் என்பதிலிருந்து ரூ. 40 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம்.