For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக அதிருப்தியாளர்கள் மீண்டும் சென்னையில் முகாம்-எதியூரப்பா தப்புவது கடினம்?

Google Oneindia Tamil News

Yeddyurappa
சென்னை: 11 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி பின் அணி திரண்டுள்ள நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு சற்றும் நம்பிக்கையே இல்லாமல் எதிர்கொள்கிறார் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எதியூரப்பா.

கோவாவில் முகாமிட்டிருந்த பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேரும் நேற்று இரவு குமாரசாமியுடன் சேர்ந்து பெங்களூருக்கு வந்தனர். பின்னர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மட்டும் சென்னைக்குக் கிளம்பி வந்து ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதனால் கர்நாடக பாஜக பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

முன்னதாக குமாரசாமி செய்தியாளர்களிடம் விமான நிலையத்தில் பேசுகையில், நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். கர்நாடக அரசியல் நிலைமை தற்போது கட்டுக்குள் வந்து விட்டது. ஆட்சியை மாற்றுவது என்பதில் அனைவரும் உறுதியுடன், ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்றார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் ஆனந்த் அஸ்னோடிகர் கூறுகையில், அனைத்து அதிருப்தி எம்எல்ஏக்களும் ஒற்றுமையுடன் உள்ளோம். எங்களுக்கு எதிராக பாஜகவினர் வன்முறையை கையில் எடுத்துள்ளனர். மும்பையில் நாங்கள் தங்கியிருந்தபோது எங்களது வாகனங்களைத் தாக்கினர். அதேபோல கோவாவிலும் தாக்குதல் நடந்தது. கொச்சியிலும் தாக்கினர்.

கர்நாடக மக்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம்.வேறு யாரைப் பற்றியும் கவலை இல்லை என்றார்.

குமாரசாமிதான் அத்தனைக்கும் காரணம்!

தற்போதைய பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு குமாரசாமிதான் காரணம் என்று முன்பு பாஜக குற்றம் சாட்டியது. தற்போது அது உறுதியாகியுள்ளது. குமாரசாமி அதிருப்தி எம்.எல்.ஏக்களைத் தூண்டி விட்டு வருவதும் நிரூபணமாகியுள்ளது.

முன்னதாக 14 அதிருப்தியாளர்களில் 3 பேர் மீண்டும் பாஜக அரசுக்கு ஆதரவாக திரும்பினர். இருப்பினும் 11 பேர் குமாரசாமி பின்னால் அணி திரண்டிருப்பதால் எதியூரப்பா அரசு நாளைய வாக்கெடுப்பில் வெல்வது கடினம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தங்களது எம்.எல்.ஏக்கள் 12 பேரை கோவாவிலிருந்து குமாரசாமி ஆதரவாளர்கள் கடத்திச் சென்றுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இவர்களுக்கு காங்கிரஸ் கட்சியும் உடந்தையாக இருப்பதாகவும் பஜாக கூறியுள்ளது.

இதுகுறித்து அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தலைவராக முன்பு செயல்பட்டவரும், தற்போது எதியூரப்பாவுக்கு ஆதரவாக மாறியுள்ளவருமான வருவாய்த்துறை அமைச்சர் ரேணுகாச்சாரியா கூறுகையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரகசிய உடன்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.இதன் மூலம் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டனர். பெரும் பணத்திற்கு அவர்கள் விலை போய் விட்டனர் என்றார்.

எதியூரப்பா வெல்வது கடினம்

நாளைய நம்பிக்கை வைக்கெடுப்பின்போது பாஜகவுக்கு 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. முன்பு அக்கட்சிக்கு 122 பேரின் ஆதரவு இருந்தது. இவர்களில் ஐந்து பேர் சுயேச்சைகள் இவர்களில் 14 பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஐந்து சுயேச்சைகள் கடந்த வாரம் அதிருப்தியாளர்களாக மாறினர். தற்போது இவர்களில் 3 பேர் மீண்டும் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதால், 16 பேர் அதிருப்தியாளர்களாக தொடருகின்றனர்.

தற்போதைய நிலையில் கர்நாடகத்தில் குதிரை பேரம் படு வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியல் படு கேவலமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

வேடிக்கை பார்க்கும் காங்.

நடப்பதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. இருப்பினும் குமாரசாமிக்கு ரகசியமாக அது ஆதரவு தருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

எதியூரப்பா ஆட்சி கவிழ்ந்தால், குமாரசாமியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தன் மீது கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக வெளிப்படையாக அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்காமல் மறைமுகமாக குமாரசாமிக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.

பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஓரணியில் திரட்டவும், கோவாவில் அவர்கள் தங்குவதற்கு உதவவும், கோவா மாநில எதிர்க்கட்சித் தலைவரான மனோகர் பாரிகர்தான் அனைத்து உதவிகளையும் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

எதியூரப்பா பிரச்சினை தற்போது பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது யார் யார் அணி மாறப் போகிறார்கள், ஆட்சி தப்புமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது நம்பிக்கை வாக்கெடுப்பு

ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 29 மாதங்களில் எதியூரப்பா சந்திக்கும் 2வது நம்பிக்கை வாக்கெடுப்பு இது.

முதலில் கடந்த 2008ம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் ஜூன் 6ம் தேதி முதல் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தார் எதியூரப்பா. அப்போது ஆளுநராக இருந்தவர் ராமேஸ்வர் தாக்கூர்.

தற்போது எதியூரப்பா 2வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இப்போது ஆளுநராக இருப்பவர் பரத்வாஜ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X