எந்திரன் படம் பார்க்க மனைவி மறுப்பு-தற்கொலைக்கு முயன்ற ரஜினி ரசிகர்
கோவை: ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தைப் பார்க்க மனைவி வர மறுத்ததால் மனம் உடைந்த ரஜினி ரசிகர் தற்கொலைக்கு முன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (25). இவர் மனைவி பிரீதா (20). இருவரும் காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் கட்டட வேலைக்கு சென்று வருகின்றனர்.
தீவிர ரஜினி ரசிகரான வினோத்குமார், எந்திரன் படத்தை பார்க்க ஆவலாக இருந்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மனைவியிடம் சென்று "தலைவர் ரஜினியின் எந்திரன் படம் ரொம்ப பிரமாண்டமாக இருக்கிறதாம். ரஜினி சூப்பரா நடிச்சிருக்காராம். படம் பார்த்தவங்க எல்லாரும் பெருமையா சொல்றாங்க. நாமும் படத்துக்கு போகலாம்", என அழைத்துள்ளார்.
"எக்கச்சக்க கூட்டமாக இருக்கிறது, இன்னும் கொஞ்ச நாள் கழித்துப் போகலாம்" என்று கூறி தடுத்துள்ளார் மனைவி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிணக்காக மாறியுள்ளது. அன்று மதியம் இருவருமே சாப்பிடாமல் இருந்துள்ளனர்.
படம் பார்க்க செல்ல முடியாத ஏக்கமும், மனைவியுடனான சண்டையும் சேர்ந்து வினோத் குமாருக்கு வெறுப்பை ஏற்படுத்த, வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென தூக்கு மாட்டிக் கொண்டார் அவர். இதைப் பார்த்து பிரீதா கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வினோத்குமாரை மீட்டு சரவணம்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை சாமிநாதன் கூறுகையில், "என் மகன் சரவணன் தீவிர ரஜினி ரசிகன். சின்ன வயசிலேருந்து எப்போதும் ரஜினி ரஜினி என்று கூறிக் கொண்டிருப்பான். ரஜினி ரசிகனாக இருந்ததாலோ என்னமோ எந்த கெட்ட பழக்கமும் அவனுக்கு இல்லை. அதனால் நாங்களும் அவனை விருப்பப்படி விட்டுவிட்டோம்.
இப்போது எந்திரன் படம் பார்த்துவிட்டு மற்றவர்கள் புகழ்ந்து கூறியதைக் கேட்டபோது, தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலும், அதற்காக மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவும் அவன் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். நல்லவேலை சீக்கிரம் காப்பாத்திட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications