சிமென்ட் விலை தொடர்ந்து கிடுகிடு உயர்வு-மக்கள் கடும் அதிருப்தி
நெல்லை: சிமெண்ட் விலை தொடர்ந்து கிடு கிடுவென உயர்ந்து வருவதால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு மூடை சிமிண்ட் 150 ரூபாய் வரை விற்றது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிமி்ண்ட் உற்பத்தி நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து செயற்கையாக தட்டுபாட்டை ஏற்படுத்தி சிமிண்ட் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
ஒரு மூடை சிமிண்ட் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது ரூ.300 ரூபாயை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு பின் ஒரு மூடை சிமிண்ட் விலை ரூ.350 ரூபாய் என கூறப்படுகிறது. இதனால், ஏழை, நடுந்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்நாளில் ஒரு வீடு கட்டுவதை லட்சியமாக கொண்ட ஏழை, நடுந்தர மக்கள் சிமிண்ட் விலை உயர்வால் ஒரு வீடு கட்டுவதும் கனவாக மாறிவிடுமோ என்ற அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு மூடை 200 ரூபாய் விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக குடோன்கள் மூலம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசுக்கு ஒரு மூடை ரூ.200க்கு சப்ளை செய்யும் சிமிண்ட் உற்பத்தி நிறுவனங்கள் வெளி மார்க்கெட்டில் மட்டும் ரூ.300க்கு விற்று கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.
ஏற்கனவே செங்கல், மணல், இரும்பு கம்பிகளின் விலையும் அதிகரித்த நிலையில் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே தங்க விலை உயர்வு, அத்தியவாசிய பொருட்கள் விலை உயர்வு, மின்தடை உள்பட பல்வேறு பிரச்சனைகளினால் ஏழை, நடுந்தர மக்கள் தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் வரும் தேர்தலில் இப்பிரச்சனைகள் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.