தமிழகத்தில் காங். ஆட்சி புரிய சோனியா வழி காட்ட வேண்டும்-ப.சிதம்பரம்
திருச்சி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வலிமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. எனவே இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்க சோனியா வழி காட்டியாக இருப்பது போல தமிழகத்திலும் அவர் வழி காட்ட வேண்டும் என்று கூறினார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
திருச்சி காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில்,
அடுத்த ஆண்டு தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய அளவில் காங்கிரஸ் கட்சி வலிமை பெற்று வளர்ந்து கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியின் வலிமை கூடிக்கொண்டே இருக்கிறது.
இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் உறுப்பினர்களை ராகுல்காந்தி இணைந்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்ள நேற்று செல்வபெருந்தகை, இன்று திருநாவுக்கரசர் நாளையும், நாளை மறுநாளும் அதிக எண்ணிக்கைகளில் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நீங்கள் (சோனியா) வழி நடத்த வேண்டும்.
தமிழகத்தில் உங்கள் முகத்தை அனைவருக்கும் அடையாளம் தெரியும். இந்தியாவை ஆட்சி செய்ய வழி நடத்துவது போல, தமிழகத்தையும் நீங்கள் வழி நடத்த வேண்டும் என்று அரங்கத்தில் உள்ள அனைவரது கோரிக்கையையும் உங்கள் முன்பு வைக்கிறேன் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications