20 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க அரசு முடிவு!!
சென்னை: விரைவில் 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 20 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 4 வருடங்களில் 58 ஆயிரம் ஆசிரியர்களை பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. அதனால் காலி ப்பணியிடங்கள் பெரும்பாலும் நிரப்பப்பட்டுவிட்டன.
இருப்பினும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும் ஆசிரியர்கள் எவ்வளவு தேவைப்படுகிறார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் கணக்கெடுத்து தொடக்கப் பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும் தகவல்களை அனுப்பி உள்ளனர்.
அதன்படி பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. அதேபோல தொடக்கப்பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
மொத்தத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களை நியமிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே 58 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.