நெல்லை, தூத்துக்குடியில் தேங்காய் விலை விர்ர்!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தி்ல் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இது தவிர பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேங்காய்கள் வருவதுண்டு. தற்போது கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் தேங்காய்கள் பறிக்கும் பணி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது தேங்காய்கள் காய்க்கும் காலம் என்பதால் தேங்காய் பறிக்கும் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேங்காய்கள் வரத்தில் ஐந்தில் ஒருபங்காக குறைந்து விட்டது.
தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் கொப்பரைகளை அதிகளவில் கொள்முதல் செய்து விடுகின்றன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால் அத்தொழிற்சாலைகள் உற்பத்தி அளவையும் அதிகரித்துள்ளன. வழக்கமான தேவையை விட கொப்பரை தேங்காய்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் தூத்துக்குடியில் உள்ள மார்க்கெட்டுகளில் தேங்காய்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மக்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தேங்காய்கள் விலை கடந்த ஒரு மாதத்தில் 3 மடங்காக அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பல இடங்களிலும் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முன்பு ரூ.3க்கு விற்ற தேங்காய் தற்போது ரூ.6 முதல் 6.50 வரை விற்கப்படுகிறது. பெரிய மற்றும் சிறிய ரகத்துக்கு ஏற்றவாறு விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. உழவர் சந்தையில் கிலோ ரூ.13க்கு விற்கப்பட்ட தேங்காய் ரூ.18 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் உணவு பதார்த்தங்களில் தேங்காயை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.