நிலத் தகராறு-பள்ளி மாணவனை வெட்டிக் கொன்ற தலையாரி
நெல்லை: நெல்லை அருகே நிலத் தகராறில் பள்ளி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக தலையாரி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த உயக்காட்டானின் மகன் அய்யா பிள்ளை (16). இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த உயக்காட்டான். இவர்
மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து 3 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார்.
ஆனால், அந்த நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கங்கைகொண்டானை சேர்ந்த தலையாரியான பாலு, சுப்பிரமணி, வெண்கிழவன், முருகன், கணபதி ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
உயக்காட்டான் நிலத்தை வாங்கினாலும் இந்த நிலத்தில் நாங்கள்தான் விவசாயம் செய்வோம் என்று இவர்கள் கூறியுள்ளனர். இதனால் உயக்காட்டானுக்கும் இந்த 5 பேருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உயக்காட்டானுக்கு அவரது மகன் அய்யா பிள்ளை சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
கங்கைகொண்டான் புறவழிசாலை பாலம் அருகே வந்த அவரை பாலு உள்ளிட்ட 4 பேர் கொண்ட வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றது.
அவர்களிடமிருந்து தப்பியோடிய அய்யா பிள்ளையை இந்தக் கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.