மெஜாரிட்டி-எதியூரப்பாவுக்கு 14ம் தேதி வரை கெடு-எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிருப்தி பாஜக எம்எல்ஏக்களையும், அரசுக்கு எதிரான சுயேச்சை எம்எல்ஏக்களையும் வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் தகுதி நீக்கம் செய்துவிட்டு, நேற்று கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தது.
அதையும் ஓட்டுப் பதிவாக நடத்தாமல், வெறும் குரல் வாக்கெடுப்பாக நடத்திய சபாநாயகர் போபன்னா, அரசுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், பெரும்பான்மையை அரசு நிரூபித்துவிட்டதாகவும் அறிவித்தார்.
இதையடுத்து இந்த வாக்கெடுப்பும், மெஜாரிட்டியை நிரூபித்ததும் செல்லாது என்று அறிவித்த கவர்னர், பாஜக ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந் நிலையில் எதியூரப்பாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவதாகவும், ஜனநாயக நெறிகளை பாதுகாக்கும் வகையில், முறையாக, அனைத்து எம்எல்ஏக்களையும் அனுமதித்து, மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு ஆளுநர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
ஆனால், இதை பாஜக ஏற்காது என்றே தெரிகிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்த எதியூரப்பா, ஆளுநரின் புதிய பார்முலா எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது என்றார். தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று காலை அவர் டெல்லி சென்றுள்ள எதியூரப்பா, அத்வானியின் இல்லத்தில் நடக்கும் பாஜக உயர் மட்டக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதையடுத்து எம்எல்ஏக்களுடன் பாஜக தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
கவர்னரின் இந்த புதிய அறிவிப்பால் 14ம் தேதிக்குப் பின் கர்நாடக சட்டசபை கலைக்கப்பட்டோ அல்லது முடக்கப்படோ ஜனாதிபதி ஆட்சி அமலாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தீர்ப்பு ஒத்திவைப்பு:
இந்தநிலையில், அதிருப்தி எம்எல்ஏககளை தகுதி நீக்கம் செய்தது சரியா தவறா என்பது குறித்த வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 11 பாஜக எம்.எல்.ஏக்களும், ஐந்து சுயேச்சைகளும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசியல் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
14ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ள நிலையில் தீர்ப்பு 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த 16 பேரும் வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 14ம் தேதி வாக்கெடுப்பு நடந்தாலும் மறுபடியும் ஒரு குழப்பமான நிலையே ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் கர்நாடகம் பெரும் அரசியல் குழப்பத்தில் மீண்டும் மூழ்கியுள்ளது.