சட்டசபைத் தேர்தலுக்கான போரை மதுரையில் தொடங்குகிறார் ஜெ.-பொள்ளாச்சி ஜெயராமன்

மதுரை அதிமுக போராட்டம் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் கோவையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,
வரும் 18ஆம் தேதி மதுரையில் ஜெயலலிதா தலைமையில் நடக்கவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக இருக்கும்.
மதுரை மண்ணில்தான், எம்.ஜி.ஆர்., உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். அங்கேதான், தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அறிமுகம் செய்தார். அந்த மண்ணிலிருந்துதான் முதன் முறையாக, சட்டசபைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக, அவர் வலம் வந்தார். இப்போது, அந்த மதுரையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான், அதே மதுரை மண்ணில் அடுத்த தேர்தலுக்கான போரை ஜெயலலிதா துவங்கவுள்ளார்.
இப்போது துப்பாக்கி ஏந்திய போலீசாரின் உதவியோடு, மதுரையில் ரவுடித்தனம் செய்பவர்கள், ஓடி ஒளிய வேண்டிய நாள் விரைவில் வரும். ஒரு லட்சம் அழகிரிகள் வேலை பார்த்தாலும், ஓட்டுக்கு ஒரு சவரன் கொடுத்தாலும் இடைத்தேர்தலைப் போல, பொதுத்தேர்தலில் ஜெயிக்க முடியாது.
அ.தி.மு.க.வினால் வாழ்வு பெற்றவர்கள், பணத்தைச் செலவழித்து, ஆட்களைக் கூப்பிட்டு வர வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் அனுப்பும் பேருந்திலாவது மதுரைக்கு வர வேண்டும்.
மதுரையில் மூன்று இடைத்தேர்தல்களில் நாம் அடி வாங்கியிருக்கிறோம். ரத்தம் சிந்தியிருக்கிறோம். எம்.ஜி.ஆர்., பாணியில், நாம் அதை வட்டியும், முதலுமாகத் திருப்பித்தர வேண்டும். மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டம், அழகிரிக்குத் தரப்படும் நேரடி பதிலடியாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications