மன்னார்குடி அருகே கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு தீ வைப்பு - பதட்டம்
மன்னார்குடி: மன்னார்குடி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் பழைய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருவிழா நடந்தது.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வடிவேல் என்பவர் விழாவுக்கு வருபவர்களை வரவேற்று பேனர் வைத்திருந்தார். அந்த பேனரை யாரோ கிழித்துவிட்டனர். இது குறித்து திருமக்கோட்டை போலீசில் வடிவேல் புகார் செய்தார்.
இதற்கு அதே பகுதியில் வசிக்கும் அன்புசெல்வன், அவரது மகன் விஜயன், கணேசன் மகன் முருகானந்தம் ஆகியோர் தான் காரணம் என வடிவேல் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் விஜயன், தனது தாய் மலர்கொடியை பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் முத்தையா, புகழேந்தி ஆகியோர் மீது பைக் உரசிச் சென்றது. இதனால் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து விஜயன் அவரது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தார்.
மேலும், புகழேந்தி வீட்டை அடித்து நொறுக்கியதுடன், கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு எதிர் வீட்டில் இருந்த சதீஷ் என்பவரது பைக்கையும் அடித்து நொறுக்கினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. உமையாள், மன்னார்குடி டி.எஸ்.பி. குணசேகரன், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தவர்களை கைது செய்யக் கோரி ராதாநரசிம்மபுரத்தில் கட்சிக்காரர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மன்னார்குடி தாசில்தார் முருகானந்தம் சமாதானம் செய்து அனுப்பினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.