கொலைபாதகன், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதையா? கி.வீரமணி கண்டனம்

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை...
ஈழத் தமிழர்களை சொந்த நாட்டு மக்கள் என்று கூட பார்க்காமல் இனவெறி கொண்டு கொன்று குவித்ததோடு மட்டமல்லாமல் உயிருடன் இருப்பவர்களையும் மிருகங்கங்களைப் போன்று பட்டியில் அடைத்து வைத்திருக்கும் கொடுங்கோலன் ராஜபக்சேவை, இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.
ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்காக இலங்கைக்கு பல கோடி ரூபாய் கொடுத்தும் இன்னும் அங்கு ஈழத் தமிழர்கள் சசதந்திர காற்றை சுவாசித்த பாடில்லை. இந்நிலையில் 'இடிஅமீனை"விட இழிவான அதிபர் ராஜபக்சேவிற்கு இந்திய அரசு ராஜ மரியாதை அளிப்பது மனித நேயமுள்ளவர்களுக்கு வேதனையை அளிப்பதாகும்.
மத்திய அரசுக்கு ஈழத் தமிழர்களை பற்றி எந்த கவலையும் இல்லை. நேரத்திற்கு ஏற்ப நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் விளைவுகளை சந்திக்க நேரலாம்.
காங்கிரஸ் பா.ஜ.க. போன்று மதவெறி பிடிக்காமல் இருக்கின்றபோதிலும், அரசின் இத்தகைய செயல்களால் அவர்கள் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டு போகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அல்லல்படும் நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இத்தனை கொடுமைகளுக்கும் காரணமான பாதகனுக்கு சிவப்பு கம்பளமா? இதற்கு மத்திய அரசு கொடுக்கும் நொண்டிச் சாக்கை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
தமிழர்கள் ஏமாளிகள், அப்பாவிகள் என்று மட்டும் ஒருபோதும் தவறாக எண்ண வேண்டாம்.
தக்க சமயத்தில் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இதை மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும் என்று அவர் கூறினார்.
திருமாவளவன் புறக்கணிப்பு:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
இந்திய அரசின் இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கண்டிக்கிறது. இந்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன். தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications