பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் பட்டியல்-நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம்
மதுரை: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
பன்றிக் காய்ச்சல் நாடு முழுவதும் 2வது முறையாக வேகமாகப் பரவி வருகிறது. முதல் பரவலில் விட்டுப் போன மாநிலங்கள் தற்போதைய பரவலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. நாட்டிலேயே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட ஒவ்வொரு 100 இந்தியர்களிலும், 22 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதமாகவே இருந்தது. ஆனால் தற்போது அதை விட ஐந்து மடங்கு அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி வரை 1155 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 249 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து பிரிவு இயக்குநர் பொற்கைப்பாண்டியன் கூறுகையில், வானிலை மாற்றம்தான் தமிழகத்தில் அதிக அளவில் பன்றிக் காய்ச்சல் பரவக் காரணம். பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவுவதற்கு இதமான தட்பவெப்ப நிலை மிகவும் சாதகமானதாக உள்ளது. தற்போது தமிழகத்தில் அந்த தட்பவெப்ப நிலை வரத் தொடங்கியுள்ளதால் பரவலும் அதிகமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications