பெங்களூரில் நெல்லை பெண் என்ஜினியர் கற்பழித்து கொலை-கொன்றது மாஜி காதலரா?
நெல்லை: நெல்லையை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் திருமணமான 2 மாதத்தில் பெங்களூரில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
நெல்லையைச் சேர்ந்தவர் மலர்விழி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
பாலசுப்பிரமணியனும் பெங்களூர் பெள்ளத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் பெங்களூர் மைகோ லே-ஆவுட் பி.டி.எம். இரண்டாவது ஸ்டேஜில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர். மலர்விழி வேலையை விட்டுவிட்டார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் பாலசுப்பிரமணியன் வேலைக்கு சென்று விட்டார். மலர்விழி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருக்கு் தெரிந்த யாரோ வீட்டுக்கு வந்துள்ளார். அவரை வரவேற்று உபசரித்துள்ளார் மலர்விழி.
பிற்பகலில் பெங்களூரில் உள்ள பாலசுப்பிரமணியனின் சகோதரி மலர்விழிக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். செல்போன் சுவிட்ச் ஆப் என பதில் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மலர்விழி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலர்விழியைப் பார்க்க மிகவும் அறிமுகமான நபர் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது. வந்த நபருக்கு மோர் கொடுத்து உபசரித்துள்ளார் மலர்விழி. அந்தக் கண்ணாடிக் கோப்பை உடைந்துள்ளது. அதை வைத்துதான் கொலை செய்துள்ளார் சம்பந்தப்பட்ட நபர். மேலும் மலர்விழிக்கு பரிசுகளையும் கொண்டு வந்துள்ளார்.
மலர் விழி முன்பு வேலை பார்த்த இடத்தில் ஒருவரைக் காதலித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் மலர் விழி வீட்டில் பாலசுப்ரமணியனுக்குக் கல்யாணம் செய்து வைத்துள்ளனர். இதனால் கோபமடைந்த முன்னாள் காதலர்,மலர் விழியைப் பார்க்க வந்தது போல நடித்துக் கொலை செய்திருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டில் நகை எதுவும் களவு போகவில்லை. எனவே நகைக்காக கொலை நடக்கவில்லை என போலீசார் உறுதி செய்துள்ளனர். விசாரணைக்காக பெங்களூர் போலீசார் விரைவில் நெல்லை, விருதுநகர் வர உள்ளனர்.