ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்-கோவையில் வைகோ கைது
சென்னை: டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வரும் ராஜபக்சேவைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ இன்று கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார்.
லட்சக்கணக்கான தமிழர்கலை படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததுள்ள காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ம.தி.மு.க.வினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அதையும் மீறி ம.தி.மு.க., இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் நூற்றுக் கணக்கானோர் கருப்பு கொடியுடன் அங்கு திரண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தனர்.
மேலும் 4 உருவ பொம்மைகளை எரிக்க முயன்ற போது போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் தொண்டர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, அர்ஜூன் சம்பத் உள்பட 143 தொண்டர்களை கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications