கூடுதல் கட்டணம்-ரசிகருக்கு அவமரியாதை-கோவை தியேட்டருக்கு அபராதம்!
கோவை பி.எம்.சாமி காலனி, 3வது வீதியை சேர்ந்த எஸ்.ஜெயராமன் என்பவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா தியேட்டரில் கடந்த 18.4.09 அன்று பகல் காட்சியில் .அயன் படம் பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றேன். பால்கனி இடத்தில் இருந்து படம் பார்ப்பதற்காக ஒவ்வொரு டிக்கெட்டும் ரூ.70 வீதம் ரூ.420 கொடுத்து 6 டிக்கெட்டுகள் வாங்கினேன்.
பின்னர் தியேட்டருக்குள் சென்றபோது, கங்கா தியேட்டரின் நுழைவு வாசலில் கட்டணச்சீட்டை கிழித்துக்கொடுக்கும் பணியாளர், முன்பதிவு ரசீதை பெற்றுக்கொண்டு பாதியாக கிழித்து, ஒரு பாதியை என்னிடம் தந்தார். பின்னர் ரூ.40க்கான 6 கட்டணச் சீட்டுகளை பாதியாக கிழித்து தந்தார்.
ரூ.40க்கான டிக்கெட்டுக்கு ஏன் ரூ.70 வாங்கியுள்ளார்கள் என்று கேட்டபோது, தியேட்டர் ஊழியர் மரியாதை குறைவாக பேசினார். மகிழ்ச்சியாக சென்று குடும்பத்துடன் படம்பார்க்கலாம் என்று கருதிய எனக்கு இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டது.
ஒரு சாதாரண நபர் தியேட்டரில் கட்டணச்சீட்டு வாங்கி தியேட்டருக்கு வெளியே நின்று, அதிக விலைக்கு விற்றால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக சொல்லி, காவலர்களும், தியேட்டர் நிர்வாகத்தினரும் அவரைப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள்.
ஆனால் இந்த தியேட்டர் நிர்வாகத்தினர் முன்பதிவு என்ற பெயரில் அதிகபட்ச சில்லரை விலையைவிட 75 சதவீதம் அதிகம் விற்று பணம் சம்பாதித்து வருவது பொதுமக்களை ஏமாற்றுவதுடன், அரசுக்கும், மாநகராட்சிக்கும் வரியாக கிடைக்ககூடிய வருவாய் கிடைக்காமல் போய்விடுகிறது.
எனவே என்னிடம் வசூலித்த ரூ.420 கட்டணத்தை திருப்பி தர உத்தரவிடுவதுடன், சேவை குறைபாட்டுக்காக ரூ.2 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதில் மனு தாக்கல் செய்த தியேட்டர் நிர்வாகம், அத்தனை புகார்களையும் மறுத்ததோடு, வழக்கையும் தள்ளுபடி செய்யக் கோரியிருந்தது.
ஆனால் அதை நுகர்வோர் கோர்ட் நிராகரித்து விட்டது. பின்னர், நுகர்வோர் கோர்ட் நீதிபதி தண்டபாணி, உறுப்பினர்கள் கே.ரத்தினம், எஸ்.சரசுவதி ஆகியோர் அடங்கிய குழுவினர் பிறப்பித்த உத்தரவில்,
தியேட்டர் நிர்வாகத்தினர், மனுதாரரிடம் ஒவ்வொரு கட்டணச்சீட்டுக்கும் கூடுதலாக பெற்றுக்கொண்ட ரூ.30 என்ற வீதத்தில், 6 கட்டணச் சீட்டுகளை சேர்த்து ரூ.180 ஐ மனுதாரருக்கு 12 சதவீத வட்டியுடன் திருப்பிக்கொடுக்க வேண்டும்.
சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் இன்னல் ஆகியவற்றுக்கு எதிர் மனுதாரர்கள் இழப்பீடு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ.1000மும் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications