பண பலத்தை வைத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க திமுக முயற்சி-டாக்டர் கிருஷ்ணசாமி
மதுரை: மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து ஓட்டுக்களைப் பெற்று வெற்றியை ஈட்ட ஆளுங்கட்சி முயற்சிக்கிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
மதுரையில், புதிய தமிழகம் கட்சியின் 14 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில்,
கட்சியின் 13வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மருத்துவ முகாம், ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், சுற்றுப்புற சூழல் குறித்து கட்சியினர் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இலவச திருமணங்களை நடத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும்.
தேர்தல்களில் மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து ஓட்டு பெற ஆளுங்கட்சி முயற்சிக்கிறது. இதை தடுத்திட, பணத்திற்கு இரையாகாமல், நேர்முறையான முறையில் ஓட்டுப் போட, வீடு வாரியாக சென்று தேர்தல் வரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இலவச திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது.
டாஸ்மாக் வருவாயை பயன்படுத்தி தி.மு.க., அரசு, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாத திட்டங்களை நிறைவேற்றுகிறது. சட்டசபை தேர்தல் நியாயமான முறையில் நடக்க மூன்று மாதங்களுக்கு முன், அரசு கலைக்கப்பட வேண்டும்.
தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் போலீஸ் துறையை கொண்டு வர வேண்டும். தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.












Click it and Unblock the Notifications