ஜெயலலிதாவை மிரட்டி மேலும் 2 கடிதங்கள்-போலீஸாருக்கு வலுக்கும் சவால்
சென்னை: தமிழக போலீஸாருக்கு பகிரங்க சவால் விடும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மேலும் 2 கடிதங்கள் வந்துள்ளன.
சராசரியாக தினசரி 2 கொலை மிரட்டல் கடிதங்கள் ஜெயலலிதாவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை 14 கடிதங்கள் வந்து விட்டன. ஆனால் இதுவரை ஒருவரைக் கூட போலீஸார் கைது செய்யவில்லை. கடிதங்கள் வருகின்றன, தொலைபேசியில் மிரட்டுகிறார்கள். இமெயிலில் மிரட்டுகிறார்கள். ஆனால் ஒரு துப்பும் கிடைக்கவில்லை தமிழக போலீஸாருக்கு.
தமிழக காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது இந்த ஜெயலலிதா மிரட்டல் கடித விவகாரம். நேற்று முன்தினம்தான் நான்கு கடிதங்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை மேலும் 2 மிரட்டல் கடிதங்கள் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்தது.
வழக்கம் போல இதிலும் மதுரை கூட்டத்திற்குப் போகக் கூடாது என்று மிரட்டியுள்ளனர்.
வில்லாபுரத்திலிருந்து ஈஸ்வரன்!
மதுரை வில்லாபுரத்திலிருந்து ஈஸ்வரன் என்ற பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், 18-ந்தேதி உங்களுக்கு கெட்ட நாள். கவுண்டவுன் ஆரம்பமாகி விட்டது. வில்லாபுரம், அவனியாபுரம் தாண்டித்தான் செல்ல வேண்டும். அன்று உங்களுக்கு மரணம் நிச்சயம்
என் பெயரை குறிப்பிட்டுத்தான் எழுதியுள்ளேன். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. தற்கொலை படை தாக்குதல் நடத்துவது உறுதி.
இவன், தற்கொலை படை தலைவர் என்று கூறப்பட்டுள்ளது.
இன்னொரு கடிதத்தில் சிறுத்தை நாகராஜன், சீனிவாசன், சுமதி ஆகிய மூன்று பெயர்கள் உள்ளன.
16 கடிதங்கள், ஒரு இமெயில், ஒரு தொலைபேசி மிரட்டல் என ஜெயலலிதாவுக்கு அடுத்தடுத்து சரமாரியாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டுள்ள நிலையில் இதுகுறித்து போலீஸ் தரப்பில் என்ன மாதிரியான விசாரணை நடந்து வருகிறது என்பது தெரியவில்லை.