பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூர்: பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வளாகத்திற்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கும் குழுவினர் விரைந்து வந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
சம்பவத்தின்போது கமிஷனர் சங்கர் பிதரி அலுவலகத்தில்தான் இருந்தார். அவரை பாதுகாப்பு கருதி அங்கிருந்து போகுமாறு வெடிகுண்டு நிபுணர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் நான் இங்கிருந்து போக மாட்டேன். நீங்கள் சோதனை செய்யுங்கள் என்று கூறி விட்டார். சொன்னபடியே தனது அறையை விட்டு அவர் அகலவில்லை.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெடிகுண்டு மிரட்டில் புரளி என்று தெரிய வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.
மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி ஒரு மொபைல் போன் என்பதும், பரப்பன அக்ரஹாரத்திலிருந்து அது வந்ததும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications