ஜவுளி வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய துணை முத்திரை ஆய்வாளர் கைது
கரூர்: ஜவுளி வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய துணை முத்திரை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் மோகன் (54). ஜவுளி நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் கழிவுத் துணிகளை எடைக்கு வாங்கி அதை மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடையில் உள்ள எடைத்தராசினை ஆய்வு செய்து முத்திரை அளிக்க, கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட துணை முத்திரை ஆய்வாளர் விஜயன் (49), ரூ. 1,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து ஜவுளி வியாபாரி மோகன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி கரூர் தொழிலாளர் அலுவலகத்தில் துணை முத்திரை ஆய்வாளர் விஜயனிடம் மோகன் ரூ. 1000 லஞ்சம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அம்பிகாபதி மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்பு, அவரை கரூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சர்வமங்களா முன்பு ஆஜர்படுத்தி கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications