2 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு-முதல்வர் கருணாநிதி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் விவசாய பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள 2 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 40 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் அளிக்கப்படுகின்றன. இப்போதைய நிலவரப்படி, விவசாய மின் இணைப்பு கோரி சுமார் 4 லட்சத்து 5 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் வீதம் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் இணைப்பு வழங்க குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
விவசாயிகளின் நலன் கருதி, 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி முதல் 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2010 டிசம்பர் மாதத்திற்குள்ளும், அடுத்த 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 மார்ச் மாதத்திற்குள்ளும், அதற்கடுத்த 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 ஜூன் மாதத்திற்குள்ளும், எஞ்சிய 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு 2011 செப்டம்பர் மாதத்திற்குள்ளும் மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.